இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Special Correspondent

இதில் உயிரிழந்த 3 பேருக்கு நிப்பா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 பேரின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிப்பா வைரசின் அறிகுறிகளால் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிப்பா வைரஸ் பரவப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடில் அதிகளவில் இந்த வைரஸ் பரவி வந்தாலும், மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கேரள சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்ததாக கூறினார்.

"நிப்பா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை அதில் மூன்று பேர் இறந்ததற்கு நிப்பா வைரஸ்தான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தற்போது இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் ராஜீவ் தெரிவித்தார்.

Special Correspondent

நிப்பா வைரசின் பிறப்பிடம் fruit bats எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.

இதுவரை இதனால் இறந்த மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். வௌவால்கள் கடித்த மாம்பழங்களை சாப்பிட்டதால் இவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து, கேரள மாநிலத்திற்கு மத்திய நோய் கட்டுபாட்டு மைய இயக்குநரை நேரில் சென்று பார்வையிடுமாறும், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

நிப்பா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரசாகும். இதன் பிறப்பிடம் fruit bats எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.

1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரவியது.

2004ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி, அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது.

பன்றிகள் உள்ளிட்ட பிற விலங்குகள் மூலமும் மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்படும்.

நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆசியாவில் சில விலங்குகள் மூலம் பரவும் நிப்பா வைரஸ், எந்த வயதுடையவர்களையும் தாக்கும். அதன் அறிகுறிகள் :
கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி
மூளை வீக்கம்
அயர்வு
சுவாசப் பிரச்சனைகள்.
நிப்பா வைரஸ் தாக்கிய 5 - 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும்.

கேரளத்தில் இந்த வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து, மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரக் குழு கேரளா விரைந்துள்ளது.

வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோய் தாக்கிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோல், மரங்களில் இருந்து விழுந்த பழங்களை உண்ணுவதையும், பதப்படுத்தப்படாத கள்ளை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் பரவி வரும் நிப்பா வைரசால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் இந்த நோய் பரவி வருவது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் கூறிகிறார்.

ஜெயலலிதா 75 நாட்கள் அப்போலோவில் இருந்த போதும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா நன்றாக உள்ளார் இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் சொன்னதும் தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க இயங்கும் அப்பொலோ மருத்துவமனையில் தான் என்பதும் குறிப்பிடதக்கது.