கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்புக்கு முன்பாக தனது முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று சனிக்கிழமை மாலை ராஜிநாமா செய்த நிலையில், குமாரசாமியை ராஜ்பவனுக்கு வருமாறு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்தார் குமாரசாமி.

Special Correspondent

அப்போது ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் அழைப்பை ஏற்றுக்கொண்ட குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் பதவியேற்க ஆளுநர் தம்மை அழைத்திருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் தந்திருப்பதாகவும் கூறினார். வரும் புதன்கிழமை பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார்.

அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்த ஏதுவாக ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவோம். இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளால் கர்நாடகாவில் ஜனநாயகம் காக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் வென்றதாக மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல் விவகாரத்தில், பா.ஜ.க ஆட்சியமைக்க அவர்களுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கியது கேலிக்கூத்து என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.