கல்வீச்சு காஷ்மீரில் காவல் படைகளுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவமாக உள்ளது. புல்வாமா டிகிரி கல்லூரியில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மோதல் தொடங்கியது.

Special Correspondent

காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவம் ஒன்றில் காயமடைந்து, உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி திருமணியின் உடல் ஸ்ரீநகரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று கொண்டுவரப்படுகிறது. ஸ்ரீ நகரில் உள்ள காவல் துறை மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஆர்.திருமணி (22), எனும் அந்த இளைஞருக்கு நர்பல் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் ஏற்பட்ட கல்வீச்சில் தலையில் காயம் ஏற்பட்டு சவுரா பகுதியில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாகவும் அங்கே சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் இறந்ததாகவும் காவல் துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.

ஸ்ரீ நகரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகள் விமானம் ஒன்றில் கொண்டுவரப்படும் அவரது உடல், அங்கிருந்து சென்னை வரும் வேறொரு விமானத்தில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்று மாலை 4 மணியளவில் அவரது உடல் சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் குல்மார்க் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது புட்காம் மாவட்டத்தில் அந்தப் பேருந்தின் மீது வீசப்பட்ட கல்லில் அவர் காயமடைந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக இரவு 8 மணிக்கு அறிவிக்கப்பட்டது என்றும் ஸ்ரீ நகரில் உள்ள செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பாதுகாப்பு படையினருடன் உண்டான மோதலில், கடந்த வாரம் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்து, பிரிவினைவாத அமைப்புகள் நேற்று, திங்கள்கிழமை மற்றும் இன்று, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்கள், காஷ்மீர் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அப்போது பாதுகாப்பு படைகளை நோக்கி நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்திலேயே திருமணி காயமடைந்ததாகவும் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சம்பவம் நடந்த இடம் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லாவின் பீர்வா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது.

சென்னையில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததற்கு ஆழமாக வருந்துவதாகவும், இந்த குண்டர்களை, அவர்களின் வழிமுறைகளை, கருத்தியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் ஒமர் அப்துல்லா.

மேலும் அவர், "ஜம்மு காஷ்மீர் அரசு தோற்றுப் போனது, முதல்வர் தோற்றுப் போனார், பாஜக-பிடிபி கூட்டணி தோற்றுப் போனது," என்றும் பதிவிட்டுள்ளார்.