தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர் தனியார் வங்கியில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.

Special Correspondent

இவருடைய மனைவி உஷா(36). 10 வருடங்களாக குழந்தை இல்லாத உஷா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். ராஜா தனது மனைவியுடன் நேற்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தார்.

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் அதனை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்னால் விரட்டிச் சென்றார்.

திருச்சி-தஞ்சை சாலையில் பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை மறித்து நிறுத்தினார். அப்போது ஜீப்பில் இருந்து கீழே இறங்கிவந்த அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை ஆவேசமாக எட்டி உதைத்தார். இதனால் அவர் நிலைதடுமாறி மனைவி உஷாவுடன் சாலையில் விழுந்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பாய்லர் ஆலை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடிவந்து படுகாயத்துடன் கிடந்த ராஜாவை தூக்கி சாலையோரம் படுக்கவைத்தனர். ஆம்புலன்சையும் வரவழைத்தனர். இதனால் பயந்துபோன போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் அங்கிருந்து ஜீப்பை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று இரவு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைய மறுத்ததால், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்துதல், தனி மனிதருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் காமராஜ் அடைக்கப்பட்டார். வரும் 21 ஆம் தேதி வரை, அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த உஷா குடுமபத்துக்கு இழப்பீடு வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சமூக ஆர்வலர் பாத்திமா எனபவர் முறையீடு செய்துள்ளார். கர்ப்பிணி இறப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யவும் அவர் கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் முறையீடு செய்துள்ளார். காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதால் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, உயர்நீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமான செயல் என்று கூறிய தலைமை நீதிபதி, திருவெறும்பூர் சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என்று கூறினார்.

இந்தநிலையில் கர்ப்பிணியை காலால் உதைத்துக் கொன்ற போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் காமராஜை சஸ்பெண்ட் செய்து ஐ.ஜி.வரதராஜலு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி திருவெறும்பூரில் ஆய்வாளர் தாக்கி கர்ப்பிணி உஷா உயிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

திருவெறும்பூரில் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மனிதநேயமற்ற செயல் மிகவும் வேதனையளிக்கிறது. காவல் ஆய்வாளரை கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்தார்.