ஆந்திராலும், தெலுங்கானாவிலும் இன்று முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Special Correspondent

தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் புதிய படங்களை வெளியிடுவது இல்லை என்று அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்றும் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்துகின்றனர். இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டிஜிட்டல் சேவை அமைப்பினருடன் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும், இனிமேல் அந்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

புதிய குழு அமைத்து திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும், டிஜிட்டல் சேவை கட்டணத்தை இனிமேல் செலுத்த மாட்டோம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறி உள்ளனர்.

போராட்டம் காரணமாக இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, விக்ரம் பிரபுவின் பக்கா, உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20–க்கும் மேற்பட்ட படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் டிஜிட்டல் சேவை கட்டணத்தை எதிர்த்து ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இன்று முதல் (2–ந் தேதி) புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.