தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் அனுமதி பெற்றுத்தான் நடைபெற்றதா என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Special Correspondent

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும், அது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும் தொடரப்பட்ட 14 வழக்குகள் திங்களன்று மதுரை உயர் நீதிமன்ற கிள்ளையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முறையான அனுமதி பெற்றுத்தான் நடைபெற்றதா? முறையான உத்தரவு பெறப்பட்டதா? அல்லது வாய்மொழி உத்தரவா?

மே மாதம் 21-ஆம் தேதி இரவு 10 மணிக்குத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 22-ஆம் தேதி காலை துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முறையாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா? அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதேபோல சமூக வலைதள முடக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்.

மறு ஆய்வுக் குழு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விபரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பிறகு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100-ஆவது நாளன்று அதிக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அவை அனைத்துக்கும் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க இயலாது. வன்முறை சம்பவங்கள் தொடர்பான விடியோ ஆதாரங்களை பார்த்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்த பிறகு வழக்கு செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்பு செய்திகள் : புது சிக்கலில் ஸ்டெர்லைட் நிறுவனம்