ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அதிகாரியை பாஜக தலைவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

ராஜ்தானியின் காரில் உள்ள பெயர் பலகையை அகற்றும் பணியில் மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரி பார்லா ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ராஜ்தானியின் காரில் உள்ள பெயர் பலகையை பணியாளர் ஒருவர் அகற்றிக் கொண்டிருக்க, அதிகாரி பார்லா அருகில் போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது காரின் பின்னால் இருந்து ஓடி வந்த ராஜ்தானி, பார்லாவின் மீது ஓங்கி சரமாரியாக அறைந்து தாக்கினார். அதிகாரியும் பாஜக தலைவரின் தாக்குதலை தடுக்க முயன்றார். மக்கள் நடமாட்டமுள்ள பொதுவெளியில் இந்த சம்பவம் நடந்தது. இதில் அதிகாரி பார்லாவுக்கு முகம், கைகளில் காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பார்லா கூறுகையில், “சொந்த காரில் அரசின் பெயர் பலகைகளை பயன்படுத்தக் கூடாது என்பதால் அதனை அகற்றுமாறு அவரிடம் பல முறை அமைதியான முறையில் வலியுறுத்தி இருந்தேன்.

அதேபோல், முன் பக்கத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு கம்பிகளையும் அகற்றவேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர் செய்யவில்லை. சட்டவிரோதமான பெயர் பலகையை அகற்ற முயன்ற போது என்னை சரமாரியாக தாக்கினார்” என்றார்.

இது குறித்து அதிகாரி பார்லே மாவட்ட துனை கமிஷனர்களிடம் ஆதாரங்களுடன் முறையிட்டார். தாக்குதல் தொடர்பான அறிக்கை மாவட்ட டிசி மற்றும் எஸ்.பிகளிடம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பாஜக தலைவர் ராஜ்தானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.