உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையின் தலைவர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீயானது பக்கத்து அறைகளுக்கும் பரவியது. கரும்புகையுடன் தீவிபத்து ஏற்பட்டாலும், அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது நேரத்தில் தீயணைப்புத் துறையினரால் அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Special Correspondent

இந்த விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தீவிபத்து நடந்த பகுதியில் இருந்தவர், மருத்துவமனையின் முக்கிய கோப்புகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் குழந்தைகள் உயிரிழப்பு குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து நடந்த அறையில் இருந்த தீயணைப்பான் சிலிண்டர்கள் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஜேபி யோகி தலைமையில் விபத்து நடைபெற்ற பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்டு மாதம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைபாட்டினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. அது குறித்த விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பிஜேபி அரசு மீது இந்த விபத்து ஏற்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.