தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நேற்று 4வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் நேற்றும் 70 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. அதாவது, மொத்தம் உள்ள 22,500 பஸ்களில் சுமார் 15,000 பஸ்கள் 4வது நாளாக ஓடவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். பஸ் ஸ்டிரைக்கால் தனியார் பேருந்துகளில் அதிக விலையை கொடுக்க வேண்டியுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Special Correspondent

தொழிற்சங்கங்கள் கோரிக்கையை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் போராட்டத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் மீண்டும் மறுத்து விட்டன.

கடந்த 4 நாட்களாக அரசு பஸ்கள் இயங்காததால் மக்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். மக்கள் நலன் கருதி ஊழியர்கள் பணிக்கு திரும்ப முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிலுக்கு தொழிற்சங்கங்களும் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். நிலுவை தொகை 7,000 கோடியை விடுவிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்கள், கனரக லாரி ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்களை வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல மாவட்டங்களில் நேற்றும் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டத்தை மீறி தற்காலிக டிரைவர்களை பயன்படுத்துவதாக அரசு மீது அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தற்காலிக டிரைவர்களால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் வயலில் இறங்கியது. அதேபோல், தலைநகர் சென்னை ஆவடியில் நேற்று முன்தினம் தற்காலிக ஓட்டுனரால் மாநகர பஸ் ஒன்று சுவரில் உரசி விபத்து ஏற்பட்டது. சென்னை சாந்தோமில் நேற்று மாநகர பஸ் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் தற்காலிக பணியாளர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, போதிய அனுபவம் இல்லாத டிரைவர்களால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன. ஆனால், அரசு அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தற்காலிக டிரைவர்களை பணியமர்த்தி வருவதால் உயிர்ப்பலி அதிகரித்துள்ளது.

மேலும், நீதிமன்ற தடை உத்தரவு குறித்து நீதிமன்றத்தில் இன்று முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இன்று 5வது நாளாக பஸ் ஸ்டிரைக் நீடிக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை. ஆனால், இன்றும் பஸ்கள் இயங்காததால் பல்வேறு தரப்பு மக்கள் 5வது நாளாக கடும் அவதி அடையும் சூழல் உருவாகியுள்ளது.

ஆரம்பத்திலேயே பேசி தீர்த்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் அரசு அலட்சியமாக செயல்பட்டதால் தான் தங்களுக்கு இந்த கதி நேரிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பஸ் ஸ்டிரைக்கால் பயணிகள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். அரசு பிரச்னையை தீர்க்காமல் பிடிவாதமாக உள்ளதால் பொங்கல் வரை ஸ்டிரைக் நீடிக்கும் நிலை உள்ளது. எனவே, பொங்கலுக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தபடி சென்னையில் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு கவுன்ட்டர் நாளை திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

அரசு பஸ்கள் தொடர்ந்து நேற்று 4வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் பெரிதும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும்.

ஆனால் 70 முதல் 80 சதவீத பஸ்கள் ஓடாததால் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் சுமார் ரூ.80 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.