ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவருவது குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மத்திய அரசின் மொழி சார்ந்த கொள்கைகள் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.

Special Correspondent

இந்தி மொழியை ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பது குறித்து அரசு ஆர்வம் காட்டுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது பேசிய சசி தரூர், ‘இந்தி நம் நாட்டின் தேசிய மொழி கிடையாது. மாறாக அது இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்று என்பதை மறுக்கமுடியாது.

இந்தியை ஐநாவில் பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன? ஒரேயொரு மொழிக்கு நீங்கள் காட்டும் அக்கறை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ இந்தி பேசுவதால் மட்டும் அதைப் பிரபலப்படுத்த வேண்டுமா? இந்தி பேசும் மக்கள் இதை எண்ணி பெருமை கொள்ளலாம்.

ஆனால், இந்த நாட்டில் தன்னை இந்தியன் என எண்ணி பெருமை கொண்டிருக்கும் மற்றவர்களை ஏன் இந்த அரசு கருத்தில் கொள்வதில்லை? எதிர்காலத்தில் இந்த நாட்டின் பிரதமராகவோ, வெளியுறவுத்துறை அமைச்சராகவோ ஒரு தமிழர் வந்தால் என்ன செய்வீர்கள்? என பல நுணுக்கமான கேள்விகளை எழுப்பினார்.

ஐநாவில் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற பாஜக எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு சுஷ்மா, ‘ஐநாவில் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்க முடியாமல் இருப்பதற்கு ஐநாவின் விதிமுறைகளே காரணம்’ என பதிலளித்துள்ளார்.