ஆர்.கே.நகரில் ரூ.10 ஆயிரம் தருவதாக வாக்கு கொடுத்து அதற்காக 20 ரூபாயை டோக்கனாக தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்திருப்பதாக அதிமுக பிஜேபி கட்சிகளை சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே தினகரன் மீது குற்றம் சுமத்தினர்.

Special Correspondent

இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தினகரன் ஆதரவாளர்கள் வினியோகித்தாக கூறப்படும் 20 ரூபாய் டோக்கனை, ஆர்.கே.நகர் மக்கள் கையில் வைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்த நிலையில் தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகுதியில் ரூ.10 ஆயிரம் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 20 ரூபாய் டோக்கனை எடுத்துக் கொண்டு சென்ற மக்களுக்கு சாப்பிடும் அல்வா கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10 ஆயிரம் ரூபாய் பண்டலுடன் காரில் சிலர் காத்திருக்கிறார்கள் என்கிற தகவல் அப்பகுதி முழுவதும் தீயாக பரவியதை தொடர்ந்து ஆர்.கே.நகர் மக்கள் அப்பகுதிக்கு கூட்டமாக திரண்டு சென்றனர். காரில் இருந்தவர்கள் டோக்கனை வாங்கிக் கொண்டு, பெரிய பேப்பர் பண்டலை கையில் கொடுத்துள்ளனர்.

இதனை இங்கு வைத்து பிரிக்காதீர்கள். வீட்டுக்கு கொண்டு போய் பிரித்து பாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இதன்படி பார்சலை வாங்கியவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று பிரித்து பார்த்தனர். அப்போது அதில் மஸ்கோத் அல்வா இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பேராசை பட்டு மோசம் போயிட்டோமே என்றவாறே சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுததை பார்க்க பாவமாக இருந்ததாக லோக்கல் நிருபர்கள் தெரிவித்தனர்