சென்னையை உலுக்கிய சிறுமி ஹாசினி வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Special Correspondent

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தஷ்வந்தின் குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமானதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

பிறகு தண்டனை குறித்து இருதரப்பினரும் வாதங்களை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி, 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி மாலை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி மாயமானார். அவளை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இது குறித்து மாங்காடு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து, அதே குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் தஷ்வந்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், ஹாசினியை அவர் வீட்டுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததையும், அப்போது அவர் கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

மேலும் ஹாசினியின் உடலை பையில் வைத்து எடுத்துச் சென்று அனகாபுத்தூர் பாலத்தையொட்டி இருக்கும் பகுதியில் பையுடன் சேர்த்து ஹாசினியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து, சிறுமி உடல் எரிக்கப்பட்ட இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சிறுமி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த்தின் மீதான குண்டர் சட்டம் செப்டம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது. தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை தொடர்ந்த வழக்கில், காவல்துறை உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து, தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அதிர்ச்சி அடைந்த ஹாசினியின் தந்தை பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளது. என் மகளை கொன்றவன் வெளியே வந்தால் பலரை கொல்லவும் தயங்க மாட்டான். அவன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது.

என் மகள் மரணத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் என் மனைவி வெளியே வரவில்லை. குற்றவாளியால் மற்றொரு குழந்தை பாதிக்கப்படலாம். அவன் உயிர் வாழவேக் கூடாது. அவனுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

குற்றவாளியின் தந்தை, என்னிடம் சவால் விட்டுள்ளார், என் மகனை வெளியே கொண்டு வருவேன் என்று சவால் விடுத்துள்ளார். இதற்கு எதிராக இறங்கிப் போராடத் தயார். ஆனால், என் குடும்பத்தின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்று பாபு கலங்கிய மனதோடு கேள்வி எழுப்பினார்.

சிறையில் இருந்து தஷ்வந்த் வெளியே வந்ததை அடுத்து, அவர்களது பெற்றோர் குன்றத்தூருக்கு இடம் பெயர்ந்தனர்.

சிறையில் இருந்து ஜாமீனில் செப்டம்பர் மாதம் வெளிவந்த தஷ்வந்த் பெற்றோரிடம் செலவுக்குப் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் பெற்றோருக்கும், தஷ்வந்துக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 2-ஆம் தேதி வீட்டில் இருந்த தஷ்வந்த், தாய் சரளாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் தஷ்வந்த். குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தஷ்வந்தை தேடினர்.

இந்நிலையில், மும்பை ரேஸ்கோர்ஸில் தஷ்வந்த் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மும்பை சென்ற போலீஸார் தஷ்வந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தஷ்வந்த் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டான். தாயைக் கொல்லவா ஜாமீனில் வெளியே கொண்டு வந்தோம் என்று அப்போதே தஷ்வந்தின் உறவினர்கள் அவரைத் தாக்க முயன்றனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே சென்னை புழல் சிறையில் தஷ்வந்த் அடைக்கப்பட்டிருந்தார்.