பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

Special Correspondent

ஏற்கெனவே வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா பாஜக ஆட்சியில் லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி (46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட இந்தியச் செல்வந்தர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக, சிபிஐயிடம் அந்த வங்கி நிர்வாகம் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி புகார் அளித்தது. அதில், நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும், அவரது பங்குதாரர்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி, சகோதரர் நிஷால், பங்குதாரர்களான மெஹுல் சினுபாய் சோக்ஸி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவலர்கள் கோகுல்நாத் ஷெட்டி (ஓய்வுபெற்றவர்), மனோஜ் காரட் ஆகியோருக்கு எதிராக சிபிஐ கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

இந்த தகவல் கசிந்து நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் ஜனவரி 1-ஆம் தேதியே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதேபோல், நீரவ் மோடியின் பங்குதாரரும், கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் உரிமையாளருமான மெஹுல் சோக்ஸியும் ஜனவரி 6-ஆம் தேதி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாடு தப்பிச் சென்ற பிறகே, அவர்கள் நால்வரையும் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்தது.

இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி மீண்டும் புதன்கிழமை ஒரு புகார் கொடுத்தது. அதில், நீரவ் மோடி சட்ட விரோதப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்திருப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.

இதனிடையே, ரூ.280 கோடி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். அதனடிப்படையில், நீரவ் மோடிக்குச் சொந்தமான இடங்களில் அவர்கள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

மும்பை குர்லா பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடியின் இல்லம், காலா கோடா பகுதியில் உள்ள அவரது நகைக் கடை, பாந்த்ரா மற்றும் லோயர் பரேல் பகுதிகளில் உள்ள அவருக்குச் சொந்தமான 3 நிறுவனங்கள், குஜராத் மாநிலம், சூரத் நகரில் 3 இடங்கள், தில்லி டிஃபன்ஸ் காலனி மற்றும் சாணக்கியபுரி ஆகிய இடங்களில் உள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான நகைக் கடைகள் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

சோதனையின் முடிவில், தங்கம், வைரக் கற்கள், ரொக்கப் பணம் உள்பட ரூ.5,100 கோடி மதிப்பிலான உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, நீரவ் மோடிக்குச் சொந்தமான 6 சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர்.

நீரவ் மோடியின் மோசடிகள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண் இயக்குநர் சுனில் மேத்தா, செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:

நீரவ் மோடி, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி அலுவலர்களின் உடந்தையுடன் போலியாக உறுதிமொழிச் சான்றுகளைப் பெற்றுள்ளனர். அந்தச் சான்றுகளை வைத்துக் கொண்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அலாகாபாத் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து அவர்கள் கடன் பெற்றுள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு உறுதிமொழிச் சான்று அளித்ததற்கான எந்தப் பதிவும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை வங்கியில் இல்லை.

ஒராண்டுக்கு முன்னரே சிபிஐயிடம் குற்றம் தெரிவிக்கபட்ட நிலையிலும் கடந்த மாதம் பிரதமர் டாவொஸ் கூட்டத்தில் பங்கேற்றது எப்படி என்று காங்கிரஸ் கட்சியும் கேள்வி எழுப்பி உள்ளது.

சமூகவலைதலத்திலே modirobsindia chottamodi என்று செய்து இளம்தலைமுறை காய்ச்சி எடுப்பது No.1 டிரண்ட் பாஜகவினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.