முதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை அறிவியலுலகம் விடைகாண முடியாத கேள்வியாக இருக்கும், மனித கருமுட்டை வளர்ச்சி குறித்து அறிவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Special Correspondent

இதை செய்வதற்கு ஆக்சிஜன் அளவுகள், ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் புரதங்களுடன் கருமுட்டைகளை வளர்ச்சியுறச் செய்யும் செயல்பாட்டை நிர்வகிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த ஆய்வக கட்டுமானம் தேவைப்படுகிறது.

இந்த ஆராய்ச்சிமுறை பயன்பாட்டளவில் சாத்தியமென்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டியிருந்தாலும், “மாலிகுலர் ஹியூமன் ரீபுருடக்சன்” என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரையின் அணுகுமுறையை செம்மைப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. வெறும் பத்து சதவீத முட்டைகளே வளர்ச்சியுறுதல் என்ற நிலையை எட்டுவது என்பது மிகவும் திறனற்ற விடயமாக பார்க்கப்படுகிறது.

அந்த முட்டைகள் கருவுற்றிருக்கவில்லை என்பதால் அவை எவ்வளவு காலம் பயன்படுத்தத்தக்கதாக இருக்கும் என்பது நிச்சயமற்றது.

“மனிதர்களின் திசுக்களில் இதுபோன்ற நிலையை எட்டுவது சாத்தியமானது என்ற கொள்கைக்கான ஆதாரத்தை அடைந்தது மிகவும் உற்சாகமூட்டுவதாக” இந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரான எவ்லின் டெல்பர் தெரிவித்தார்.

“இதை மென்மேலும் மேம்படுத்துவதற்கு இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது என்றாலும், மனித கருமுட்டை வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வதில் இந்த ஆராய்ச்சி ஒரு மிகப் பெரிய மைல்கல்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பெண்கள் பிறக்கும்போதே அவர்களின் கருப்பையில் முதிர்ச்சியடையாத கருமுட்டைகளுடன் பிறந்தாலும் அவர்கள் பூப்படைந்த பின்னரே அவை வளர்ச்சியுற ஆரம்பிக்கும்.

இப்போது கருப்பைக்கு வெளியே கருமுட்டையை வளர்ச்சியுற செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த செயல்முறையானது மிகவும் நேர்த்தியாக மனித உடலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இளம் பருவத்தின்போது சில முட்டைகள் முதிர்ச்சியடைந்தாலும், மற்றவையனைத்தும் முதிர்ச்சியடைவதற்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகலாம்.

ஒரு முட்டை வளர்ச்சியுறும்போது அதன் பாதி மரபியல் பொருளை இழக்க வேண்டும், இல்லையெனில் விந்தணுவால் கருவுறும்போது அதில் அதிகப்படியான டிஎன்ஏ இருக்கும்.

அந்த அதிகப்படியான டிஎன்ஏ ‘போலார் பாடி’ என்றழைக்கப்படும் சிறியளவிலான செல்லினுள் சேரும். ஆனால், இந்த ஆராய்ச்சியில் போலார் பாடிகள் மிகவும் பெரியளவிலானவை.

“இந்த விடயம்தான் ஆராய்ச்சிக்கு பிரச்சனையாக உள்ளது” என்று கூறும் பேராசிரியர் டெல்பர், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போது இதுபோன்ற பிரச்சனைகள் களையப்படும் என்று நம்புகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த எலியின் கரு முட்டைகள் பற்றிய ஆராய்ச்சி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையிலேயே உயிரினங்களை உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக்காட்டியது. இதே ஆராய்ச்சி முடிவை மனிதர்களின் திசுக்களில் செயற்படுத்தும்போது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவ முடியும்.

தற்போது புற்றுநோய்க்கான சிகிச்சை முறையாக உள்ள கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபியை செய்து கொள்கிறவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன.

இந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாதுகாப்பதற்கான முறையாக இருக்குமென்று இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னர் பெண்கள் முதிர்ச்சியடைந்த முட்டைகளையோ கருவையோ உறைய வைக்க முடியும். ஆனால், சிறிய வயதிலிருந்தே புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்த செயல்பாடு பொருந்தாது.

தற்போதைய சூழ்நிலையில், புற்றுநோய்க்கான சிகிச்சையை பெறுவதற்கு முன்னர் தனது கருப்பை திசுவை உறைய வைத்து, அந்த நோயாளி தனக்கு குழந்தை வேண்டுமென்று முடிவு செய்யும்போது மீண்டும் அந்த திசுவை உட்செலுத்தி பிரசவிக்க முடியும்.

உறைந்த கருப்பை திசுவில் ஏதாவது அசாதாரணங்கள் இருந்தால், அதை மிகவும் ஆபத்தானதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆராய்ச்சியின்படி ஆய்வகத்திலேயே கரு முட்டைகளை உருவாக்க முடியும் என்பது அந்த நோயாளிகளுக்கு ஒரு பாதுகாப்பான தெரிவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பை மிகப் பெரிய உற்சாகமளிக்கக்கூடிய முன்னேற்றமாக பாராட்டும் வல்லுநர்கள், இம்முறை மருத்துவரீதியாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் இன்னும் பலகட்ட ஆராய்ச்சிகளை கடக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர்.