சென்னை கொளத்தூரில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான மகாலட்சுமி தங்க மாளிகை என்ற நகைக்கடையில் கடந்த மாதம் 16-ந் தேதி துளை போட்டு கொள்ளை அடிக்கப்பட்டது.

Special Correspondent

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம் (வயது 25) என்பவன் தலைமையிலான கும்பல் இந்த துணிகர கொள்ளையை நடத்தி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நாதுராம் கும்பலை கைது செய்வதற்காக மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

அங்கு பாலி மாவட்டத்தில் உள்ள நாதுராமின் சொந்த ஊரான ராமாவாஸ் என்ற கிராமத்துக்கு சென்ற தனிப்படை போலீசார் நாதுராமின் தந்தை சென்னாராம் மற்றும் உறவினர்கள் கேலாராம், சங்கர்லால், தன்வர்ஜி ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை கும்பலின் தலைவன் நாதுராம் ராமாவாஸ் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் மீண்டும் ராஜஸ்தான் விரைந்தனர்.

இதன் பின்னர் சினிமா காட்சிகளை விஞ்சும் வண்ணம் வருவது போல் நடந்த பரபரப்பான சம்பவம் பற்றி, அங்கு சிகிச்சை பெறும் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வெளியிட்ட தகவல்கள் வருமாறு :

8-ந் தேதி அன்று நாங்கள் ராஜஸ்தான் மாநிலம் வந்த உடன் பாலி மாவட்டம் ஜெயத்ரனில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம். ஜெயத்ரன் போலீசாரிடம் குற்றவாளிகளை பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். கொள்ளையர்களின் ஊரான ராமாவாஸ் கிராமம் மிகவும் மோசமான இடம் என்றும், பகலில் அங்குசென்று குற்றவாளிகளை பிடிப்பது கஷ்டமான காரியம் என்றும், இரவில் சென்றால்தான் பிடிக்க முடியும் என்றும் கூறினார்கள்./p>

நாங்கள் 3 நாட்கள் குற்றவாளிகளின் ஊருக்கு பகலில் சென்று ரகசியமாக கண்காணித்தோம். அங்கு பகலில் சென்ற போது குற்றவாளிகள் நாதுராம், தினேஷ் சவுத்ரி, மஞ்சு ஆகியோரை பிடிக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துக்கொண்டு இருந்தோம். செவ்வாய்க்கிழமை (12-ந் தேதி) நள்ளிரவு 12 மணி அளவில் எங்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

குற்றவாளிகள் நாதுராம், தினேஷ் சவுத்ரி, மஞ்சு ஆகியோர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் 5 பேரும் குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிக்க புறப்பட்டு சென்றோம்.

அந்த நேரத்தில் ராஜஸ்தான் போலீசாரின் உதவியை கேட்கமுடியவில்லை. அதற்கான நேரமும் எங்களுக்கு இல்லை. தகவல் கிடைத்த உடன் புறப்பட்டு சென்றுவிட்டோம். என்னிடமும், பெரியபாண்டியனிடமும் கைத்துப்பாக்கிகள் இருந்தன.

கொள்ளையர்கள் பதுங்கி இருந்த கட்டிடத்தை நாங்கள் அதிகாலை 2.30 மணி அளவில் சுற்றி வளைத்தோம். அந்த கட்டிடத்திற்குள் 3 அறைகள் இருந்தன. ஒரு அறை திறந்து கிடந்தது. அதற்குள் யாரும் இல்லை. பூட்டிக்கிடந்த இன்னொரு அறையை திறந்து பார்த்தோம். அதற்குள்ளும் யாரும் இல்லை. பூட்டிக்கிடந்த 3-வது அறையை திறக்க முற்பட்டோம்.

அப்போது, ஏராளமான ஆண்களும், பெண்களும் கும்பலாக அங்கு திரண்டு வந்தனர். எங்களோடு இந்தியில் பேசி, சண்டை போட்டார்கள். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு இந்தி தெரியும் என்பதால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பலிடம் அவர் இந்தியில் பேசி சமாளித்தார். கைது செய்வதற்கு கோர்ட்டு வாரண்டு இருக்கிறதா? என்று கேட்டு தகராறு செய்தார்கள்.

திடீரென்று அந்த கும்பலில் உள்ளவர்கள் கம்பால் எங்களை தாக்கினார்கள். கற்களையும் வீசினார்கள். எனவே நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். நானும், 3 போலீசாரும் கட்டிடத்தை விட்டு வெளியே வேகமாக வந்து விட்டோம்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனும் எங்கள் பின்னால் வந்தார். கும்பல் தாக்குதல் நடத்தியபடி பின்னால் வரும்போது, எங்களுடைய ஒரு கைத்துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட்டது.

உடனே இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கீழே குனிந்து அந்த துப்பாக்கியை எடுத்து உள்ளார். அப்போது பின்னால் வந்த கும்பல் அந்த துப்பாக்கியை அவரிடம் இருந்து பிடுங்கி அவரை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு உள்ளனர். துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதும், நான் திரும்பிப்பார்த்தேன். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கீழே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துவிட்டார்.