கிராம நிர்வாக அலுவலர், குரூப் 4 தேர்வுகள் முதல் முறையாக ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 494, இளநிலை உதவியாளர் 4 ஆயிரத்து 96, தட்டச்சர் 3 ஆயிரத்து 463 என பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 351 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Special Correspondent

குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பிரிவு காலி இடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (டிச. 13) கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த டிசம்பர் 15 கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஏழாவது ஊதியக் குழு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு முதல் முறையாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

எழுத்துத் தேர்வினை எதிர்கொள்ள 10 ஆம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றாலே போதும் என்றாலும், பொறியியல், பட்டப் படிப்பு படித்த பலரும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (டிச. 13) கடைசி நாளாகும்.

சுமார் 15 லட்சம் பேர்: குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம் :

விண்ணப்பதாரர்கள், புதன்கிழமை (டிச. 13)) இரவு 11.59 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்பக் காரணங்களுக்காக கடைசி நேரத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.

இதுவரை நிரந்தரப்பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நிரந்தரமாக பதிவுசெய்து அதற்கான பதிவுக்கட்டணம் ரூபாய் 150 செலுத்திய பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதுவரை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க ஒரு நாளுக்கும் குறைவாகவே இருப்பதால், ஆயிரக்கணக்கானோர் வேகமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் அவ்வப்போது முடங்கியும், மெதுவாகவும் இயங்கி வருகிறது.

இந்தப் பிரச்னை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், நிரந்தரப்பதிவு செய்வதற்கு இரண்டு சர்வர் இணைப்புகளும், தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இரண்டு சர்வர் இணைப்புகளும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான அளவு இணையதள அலைவரிசை கொடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.

தேர்வு எழுத ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், மேலும் விண்ணப்பிக்க கடைசி நேரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் சில லட்சங்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரம் அறிய சொடுக்குங்கள்.