பம்மல், திருவள்ளுவர் நகர், நந்தனார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் குடியிருப்பவர் பிரகாஷ் (எ) தாமோதரன் (42). இவரது தாய் சரஸ்வதி (58), மனைவி தீபா (36), மகன் ரோஷன் (8) மகள் மீனாட்சி. பம்மல் துருவன் தெருவில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த அவர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஒருசிலரிடம் கடன் வாங்கி வியாபாரத்தை நடத்தி வந்தாராம்.

Special Correspondent

கடனை திருப்பிச் செலுத்த முடியாத இக்கட்டான சூழலால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தாமோதரன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி தீபா, தாயார் சரஸ்வதி ஆகியோரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

அதையடுத்து தனது இரு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து கொலை செய்த தாமதரன், மனைவி தீபாவின் அண்ணன் ராஜாவை செல்லிடப்பேசி மூலம் தொடர்புகொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறினாராம்.

பிறகு தானும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். செல்லிடப்பேசியில் தாமோதரன் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ந்த மைத்துனர் ராஜா தனது தாயார் பானுமதியுடன் தாமோதரன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு 5 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அடுத்து அதிர்ச்சியில் ராஜா அலறியுள்ளார்.

சத்தம் கேட்டு, அருகில் இருந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்துள்ளனர். சங்கர் நகர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தாமோதரன், அவரது தாயார் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோஷன், மீனாட்சி ஆகியோர் உடல்கள் உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாமோதரன் தவிர மற்ற 4 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். மயங்கிய நிலையில் உள்ள தாமோதரனை காப்பாற்ற முதலுதவி சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், உடனடியாக மேல் சிகிச்சைக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கர் நகர் போலீஸார் தாமோதரன் வீட்டில் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் கைப்பற்றிய கடிதத்தில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்னர் வியாபாரம் நொடிந்து விட்டதாகவும் ஜவுளி வியாபாரத்தில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் வியாபாரத்தையும் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

தகவல் உதவி : சங்கர் நகர் போலீஸார்