ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்களை சோதனை செய்யவும், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கவும் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Special Correspondent

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று ஆஜரான சிறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சிறையில் அடைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கைரேகையை பெறவில்லை என விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே ஜெயலலிதாவின் கைரேகை குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ ஏ.கே.போஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் கை ரேகையை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க தடை விதித்துள்ளது. ஜெயலலிதா கைரேகை தொடர்பான ஆவணங்களை சோதனை செய்யவும், இந்த வழக்கை விசாரிக்கவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், டாக்டர் சரவணன் உள்பட வழக்கில் தொடர்புடைய 28 பேரும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.