சல்மான் கான் மனுவை ஏற்று ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Special Correspondent

நடிகர், சல்மான் கான், ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் சிங் ஆகிய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமர்வு நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றும் உத்தரவை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மான்வேட்டை தொடர்பான பிற வழக்குகளில் இதே சிறையில் 1998, 2006 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் 18 நாட்கள் சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து ஜாமீன் கேட்டு சல்மான் கான் தரப்பில் அதே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தீர்ப்பை வழங்கிய நீதிபதி தேவ் குமார் காத்ரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஜாமீன் மனு விசாரணை தாமதம் ஆகலாம் என முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், ஜோத்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி ரவீந்தர் குமார் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.